
மணப்பாறை அருகே தேர்தல் வாக்காளர் பட்டியல் வரையறையில் குளறுபடி காரணமாக வாடிப்பட்டி என்ற கிராமம் முழுமையாக பட்டியலில் இல்லை என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிசம்பர் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில், 95,406 வாக்காளர்களைக் கொண்ட திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 19 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 49 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 363 ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நடைபெறும் தேர்தலில், வளநாடு பகுதியில் உள்ள வாக்காளர்கள் வரையறை பட்டியலில் குளறுபடி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.
வளநாடு ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு பகுதியான வாடிப்பட்டி வாக்காளர்களின் பெயர்கள், தற்போது வெளியாகியுள்ள பூத் பட்டியலில் தேப்புப்பட்டி மற்றும் வளநாடு சிவன்கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பிரித்து சேர்க்கப்பட்டிருப்பதாகவும், பட்டியலில் வாடிப்பட்டி என்ற பெயரே இல்லை என்றும் கூறும் வாடிப்பட்டி கிராம மக்கள் வளநாடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், மருங்காபுரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் ஊர் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்காத வாடிப்பட்டி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் நிறைவுக்கு பின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.