சென்னை: இரவு தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி விட்டு, அதிகாலை துப்பாக்கியால் சுட்டு இளம் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26). கடந்த 2017 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆயுதப்படை ஐ.ஜி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
ஞாயிறன்று அவருக்கு பிறந்தநாள். எனவே இரவு 12 மணியளவில் குடியிருப்பில் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அதன்பின் அதிகாலை 5 மணியளவில் பணிக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் தனது பணி உபயோகத்திற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு விரைந்து வந்த சக காவலர்கள் அதிர்ச்சிடைந்தனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது அலைபேசியைக் கைப்பற்றி சோதனை செய்ததில் அவர் காதல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வருகிறது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.