சென்னை: நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு, திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகிய இருவருக்கும் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தேர்தல் ஆணையமானது நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் ஏழு கட்டங்களாக நடத்தவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இதனோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மதிப்புமிக்க நேரம் மிச்சமாவதோடு, அரசு கஜானாவுக்கும் செலவு குறையும்.
குறிப்பிட்ட 21 தொகுதிகளும் தேர்தல் நடைபெறவுள்ள 39 நாடாளுமன்றத்தொகுதிகளுக்குள் வந்துவிடுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல் செய்வது எளிதாக இருக்கும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களையும் திறம்பட பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.