
சென்னை: சட்டப்பேரவையில் இன்று மிக சுவாரஸ்யமான வாதங்கள் நடைபெற்றன. அதில் ஒரு சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்..
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் எனறு அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
அப்போது எழுந்து பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், என்னுடைய தொகுதியான ராமேஸ்வரத்தில்தான் அப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி அமைய உள்ளது என்று விளக்கம் அளித்தார்.
இதைக் கேட்ட கருணாஸ், அவருடைய பேச்சாலேயே அவரை மடக்கும் வகையில், என்னுடைய தொகுதிக்கு அரசு எதையும் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய கருணாஸ், 5 ஆண்டுகளும் அதிமுக ஆட்சிக்கே எனது ஆதரவு என்றும், 5 ஆண்டுகளையும் அதிமுக அரசு ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் கூறியவர், இனி நான் தேர்தலில் போட்டியிடுவேனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்றார்.
கடைசி பஞ்ச்சாக, நான் புலியாக இருந்தாலும் பாசப்புலி என்று தெரிவித்தார் கருணாஸ். இதைக் கேட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாசப்புலி கூண்டில் போட்டு அடைத்து வந்தாலும் பாசமாக இருக்குமா? என்று கேட்டார். இதைக் கேட்டதும் பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.