
புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் மீது திங்கள்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த பிப். 2 ஆம் தேதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ மெய்யநாதனுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அறிவித்துவிட்டு பின்னர் அதிமுக பிரமுகர்களைக் கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். அப்போது, அரசுப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, மாவட்ட கல்வி அலுவலர் ஆர். வனஜாவை அவதூறாகப் பேசியதோடு பணி செய்யவிடாமல் தடுத்ததாக மாவட்ட கல்வி அலுவலர் வனஜா அளித்த புகாரின் அடிப்படையில், கீரமங்கலம் போலீஸார் பணி செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி எம்எல்ஏ மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.