
என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்துக்கு நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்திவைத்து, மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க விருத்தாசலம், புவனகிரி வட்டங்களில் உள்ள 37 கிராமங்களில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நிலக்கரி சுரங்கங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில், இன்றும் 10 ஆயிரம் ஏக்கர் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
இந்த நிலம் எடுக்கப்பட்ட காலத்தில் மாற்று வீட்டுமனை நிலம், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் அதன்படி நடந்து கொள்ளவில்லை. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் 3 ஆவது சுரங்கப் பணிக்காக நிலம் எடுக்கும் திட்டத்தை நிறுத்திவைத்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...