
கின்னஸ் சாதனைக்காக போட்டியிடுவதால், தேர்தலில் தோற்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றார் சுயேச்சையாகப் போட்டியிடும் கே. பத்மராஜன்.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த கே.பத்மராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: 1988-இல் இருந்து தேர்தல்களில் போட்டியிட தொடங்கினேன். இதுவரை ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தலில் தலா 5 முறை, நாடாளுமன்றத் தேர்தலில் 29 முறை, மாநிலங்களவைத் தேர்தலில் 39 முறை, சட்டப் பேரவைத் தேர்தலில் 62 முறை மற்றும் பல்வேறு தேர்தல்களில் என இதுவரை மொத்தம் 198 முறை போட்டியிட்டுள்ளேன். தற்போது திருவாரூர் இடைத் தேர்தலில் 199-ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
கின்னஸ் சாதனை செய்வதற்காகவே தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறேன். வாஜ்பாய், நரசிம்மராவ், எடியூரப்பா, பங்காரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, ஆர்.கே. நாராயணன், கருணாநிதி, ஜெயலலிதா, நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களோடு போட்டியிட்டுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடுவதால் பிரசாரத்துக்கெல்லாம் செல்ல மாட்டேன். கின்னஸ் சாதனைக்காக போட்டியிடுவதால், தேர்தலில் தோல்வி அடையவே விரும்புகிறேன் என்றார்.