
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும். திமுக, அதிமுக, அமமுக உள்பட பிரதான கட்சிகள் எதுவும் வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தலைமையில் கடந்த இருதினங்களாக நடைபெற்றது. கூட்டத்தில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிடிவி தினகரன் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.