
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் அரசு சார்ந்த எந்த அலுவல் பணிகளையும் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் கடுமையாகத் தாக்கிய மாவட்டங்களில் திருவாரூரும் ஒன்று. இந்த நிலையில், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுஒருபுறமிருக்க, இடைத் தேர்தலுக்கான நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. எனவே, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அமைச்சர்கள் ஆய்வுகளிலோ அல்லது இதர ஆலோசனைகளிலோ ஈடுபடக் கூடாது என தமிழக தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, புயல் நிவாரணப் பணிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபடலாம் என தேர்தல் துறை தெரிவித்துள்ளது.