காவல்துறை ஐஜிக்கு எதிரான பாலியல் புகார்: சிபிசிஐடி விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

காவல்துறை ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Updated on
1 min read


காவல்துறை ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகனுக்கு எதிராக, அவருடன் பணியாற்றிய பெண் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழுவை அமைத்தது. இந்தக் குழு ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க பரிந்துரைத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஜி முருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஜி முருகன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு இருவரின் பணி நெறி சார்ந்த வழக்கு. இந்த வழக்கை சம்பந்தப்பட்ட தனி நீதிபதி தான் விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் நேரடியாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எப்படி விசாரிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஐஜி முருகன் மீதான புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com