துணைவேந்தர் தேர்வுக் குழுவில் வெளி மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கும் கலாசாரத்தை ஆளுநர் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி எஸ்.பி. இளங்கோவன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனுடன் பல்கலை. மானியக்குழு முன்னாள் தலைவர் முனைவர் வேத் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் திருவள்ளுவர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவிலும் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கான தகுதி கொண்டவர்கள் இங்கில்லையா?
தமிழக ஆளுநராகவும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பிறகுதான் இந்த புதிய கலாசாரம் பிறந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 15 மாதங்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழுக்களிலும் வெளிமாநிலக் கல்வியாளர்கள் உறுப்பினர்களாக அமர்த்தப்பட்டனர். இது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இந்தியாவின் எந்த மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக்குழுவிலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவரை நியமிக்கும் வழக்கம் இல்லை. எனவே, தமிழக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேர்வுக்குழுவில் வெளிமாநிலத்தவரை நியமிக்கும் கலாசாரத்துக்கு ஆளுநர் முடிவு கட்ட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.