

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் வாங்கப்பட்ட 555 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
புதிதாக வாங்கப்பட்டிருக்கும் பேருந்துகள், ஏற்கனவே இருக்கும் பேருந்துகளைப் போல அல்லாமல், சிவப்பு நிறத்தில் பளிச்சென்று காட்சியளிக்கிறது. இது நிச்சயம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் 8 போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் மூலம் சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 82 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 11 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தக்கு 63 பேருந்துகளும் என 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 7 பேருந்துகளை முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.