
சென்னை: தமிழக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மாவைக் கைது செய்து நாளை மறுநாள் ஆஜர்படுத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறந்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று 8 பேர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று 7 பேர் மட்டுமே ஆஜராயினர். உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொலைதூரக் கல்வி மையங்களைத் தொடங்கத் தடை விதிக்கக் கோரி, தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் சார்பில் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது தொலைதூரக் கல்வி மையங்கள் தொடங்கப்படாது என்று பல்கலைக்கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டதுடன் தொலைதூரக் கல்வி மையங்களைத் தொடங்கவும் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தொலைதூரக் கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கி, பல்கலைக்கழக சிண்டிகேட் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து தனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிமன்றம், சிண்டிகேட் தீர்மானத்துக்குத் தடை விதித்ததுடன், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஜனவரி 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது 8 பேரில் 7 பேர் மட்டுமே ஆஜராகினர். ஆஜராகாத தமிழக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.