சென்னை: கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைக்களை எடுத்து வந்தது. அதேசமயம் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்ட போது, வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு நீதிமன்றமும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதேசமயம் ஆசிரியர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் உள்ளிட்ட அரசின் பதில் நடவடிக்கைகளும் தீவிரமானது.
இந்நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவல்லிக்கேணியில் புதன் மாலை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டு போராட்டக் குழுவினரின் ஆலோசனைக்குப் பின்னர் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.