தூத்துக்குடி: பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சோலைராஜ் (23), பேச்சியம்மாள் என்கிற ஜோதி (20) இருவரும் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு பெரியார் காலனியில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், சோலைராஜ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஜோதி பள்ளர் சமுதாயப் பெண். இரண்டு ஜாதியும் எஸ்.சி. பிரிவில் வந்தாலும், மக்களின் மனப்பான்மையில் பறையரை விட பள்ளர் சற்று உயர்ந்த ஜாதியாகக் கருதப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், பறையர் ஜாதியைச் சேர்ந்த சோலைராஜை, பள்ளர் இனப் பெண் ஜோதி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தையே ஆணவப் படுகொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தம்பதியின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.