மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா நடைபெற்றதால் ஒரு மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றால் அது இந்தியாவிலேயே முதல் தொகுதி வேலூர் தொகுதிதான் என்ற மோசமான வரலாறு உருவானது. இந்த நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜூலை 11ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை18ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 22ம் தேதியாகும்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஆகஸ்ட் 9ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.