
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கூறினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆதிதிராவிடர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆடலரசு பேசும்போது, ஆதிதிராவிடர்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2,500 வழங்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி உடனடியாக வழங்கப்படுவதில்லை என்று கூறினார்.
அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டு, ஈமச்சடங்கு உதவித் தொகை தாமதமாக வழங்கப்படுகிறது என்று திமுக உறுப்பினர் கூறுகிறார். இது தவறான தகவல். அந்த நிதி உடனடியாக வழங்கப்படுகிறது என்றார்.
அமைச்சர் ராஜலெட்சுமி: ஈமச்சடங்கு நிதி ரூ.2,500 வழங்கப்படுவதை, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதற்கான கருத்துரு முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிதி உயர்த்தி வழங்கப்படும் என்றார்.