

திருச்சி கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்த 49 பேரிடம் ரூ.29 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும்போது, திருடர்களின் அச்சுறுத்தல் அல்லது உடல்நலக்குறைவு, தீ விபத்து உள்ளிட்ட காரணங்களுக்கு அபாயச் சங்கிலியை இழுத்து ரயில்களை பயணிகள் நிறுத்தலாம். ஆனால் பலரும் தேவையில்லாமல் அபாயச் சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்துகின்றனர்.
இதனால் ரயில்கள் தாமதமாகி, ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த ரயில் தாமதம் ஆவது மட்டுமில்லாமல் அந்த ரயில் பாதையில் அடுத்தடுத்து வரும் ரயில்களும் தாமதம் ஆகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதுடன், முறையான நேரத்தில் ரயில்கள் இயக்குவதிலும் சிக்கல் உள்ளது.
இந்நிலையில் திருச்சி கோட்டத்தில் நிகழாண்டில் ஜூன் மாதம் வரைக்கும், ரயிலில் தேவையில்லாமல் அபாயச் சங்கிலியை இழுத்த 49 பேர் மீது வழக்குப் பதிந்து, அவர்களிடம் இருந்து ரூ.29 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு 182 என்ற எண்ணிற்கு அழைத்து ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் உதவியைப் பெறலாம் என திருச்சி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.