தபால் துறைத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ எழிலரசன் தாக்கல் செய்த மனுவில், தபால் துறையின் சார்பில், தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநில மொழியான தமிழில் நடத்தப்படவில்லை.
எனவே இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இனிவரும் காலங்களில் மத்திய அரசு நடத்தும் தாபல்துறைத் தேர்வில் தமிழ் மொழி, தேர்வு மொழியாக இடம்பெறுமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை ஆஜரான, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், தபால் துறைத் தேர்வை ஆங்கில் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் தேர்வு எழுதலாம் என கடந்த மே 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.