சென்னை: ஒரு படம் ஓடாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா என இயக்குனர் பா.ரஞ்சித்தை, பாஜக ஆதரவாளரான நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாணவிகள் புதன்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்கள்.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் ரிதுஸ்ரீ (18) மற்றும் . பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சாலையிலுள்ள சீனிவாசன் நகரில் வசிக்கும் நம்புராஜ். மகள் வைஷியா (17) ஆகிய இருவர்தான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள்.
இந்த இரு மாணவிகளின் தற்கொலை குறித்து வியாழனன்று இயக்குநர் பா. இரஞ்சித் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
நீட் தேர்வுப் படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்குக் கல்வி மறுப்பு. நீட் என்ற கொள்கையைச் சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்.
இவ்வாறு அவர் வேதனையுடன் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ஒரு படம் ஓடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா என இந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தை, பாஜக ஆதரவாளரான நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வியாழனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஒரு படம் ஓடாவிட்டால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லதுஅடுத்த படத்தை நன்றாக பண்ண வேண்டும் என்று நினைப்பீர்களா? அல்லது படங்களையே தடை செய்ய வேண்டும் என்று போராடுவீர்களா?
இவ்வாறு அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.