
பொறியியல் கல்வி சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தருமபுரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பொறியியல் கல்வி சேர்க்கைக்கு தற்போது, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, தமிழகத்தில் 46 சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி தொடங்கிய இப் பணி, ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெறும். முதல் நாளான ஜூன் 7-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 23,004 மாணவ, மாணவியருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், 18,756 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 4,248 பேர் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்கள் சிலர் தனியார் இணையதளம் மையத்தில் பதிவு செய்தபோது, அந்த மையங்களின் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் வழங்கியது தெரிய வந்துள்ளது. மேலும், சில மாணவர்கள் தவறுதலாக வேறு மாவட்ட சேவை மையத்தைத் தேர்வு செய்துள்ளனர். இத்தகைய காரணங்களால் சில மாணவர்களால் பங்கேற்க இயலாமல் போனது தெரியவந்துள்ளது.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாதவர்கள், தவறுதலாக வேறு மாவட்டத்தைத் தேர்வு செய்தவர்கள் ஆகியோரின் நலன் கருதி, அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மாணவ, மாணவியர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தை 044- 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தங்களது விவரங்களை அளித்தால் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
இதுவரை 1,957 பேர் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நேரிலும், 5,010 பேர் தொலைபேசி மூலமும், 22,321 பேர் மின்னஞ்சல் மூலமும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய பதிலளித்து, பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.