
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளில் பாடத்திட்டம், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண்கள் குறைப்பு, சீருடை என பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனி பாடப்பிரிவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களைப் படித்தால் போதுமானது.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கணிதப் பாடம் இருக்காது. இந்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே படிக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...