
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மைக்கான பயிற்சி நிலையக் கட்டடத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை-எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குவது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையாகும். இந்தத் துறையின் மேம்பாட்டுக்காக புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்குதல் உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், சிங்கம்புணரி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடங்கள், வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
புதிய திட்டத்துக்கு அடிக்கல்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம், அவசர கட்டுப்பாட்டு மையம் ஆகியன கட்டப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த கட்டடத்துக்கும் முதல்வர் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதேபோன்று, வருவாய்த் துறையின் கீழ் வரும் 101 நில அளவர், 157 வரைவாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான பணிநியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G