மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கோடை மழை பெய்ததன் எதிரொலியாக, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 23 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகும். கடந்த மாத தொடக்கம் முதலே சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்தது. மேலும், அருவிக்கு தண்ணீர் மூலாதாரமான தூவானம் அணையில் தண்ணீர் அடைக்கப்பட்டது.
இதனால் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லை. இதற்கிடையே சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை மழைபெய்தது.
இதனால் வெள்ளிக்கிழமை சுருளி அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் அருவிப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுபற்றி வனச்சரணாலய அலுவலர் ஒருவர் கூறுகையில், சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்தொடங்கியுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.