சென்னை: தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை அமல் செய்வதற்காக நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தை பூட்டுவதா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாதிரி நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி பத்திரிக்கையாளர் மன்றம் பூட்டி சீல் வெக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் பேட்டி அளித்ததால், பத்திரிக்கையாளர் மன்றம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பத்திரிக்கையாளர் மன்றத்தை பூட்டி சீல் வைத்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரின் புகார் நியாயமற்றது. பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மட்டும் அல்ல. தேர்தலில் ஈடுபடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட பொது வாழ்வுப் பிரமுகர்கள், செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடுவது, பேட்டியளிப்பது போன்றவைகள் எல்லாம் வழக்கமான ஒன்று தான். இது எந்த வகையிலும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகாது.
மாறாக, ஆணையரின் நடவடிக்கை கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைகளையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும், மறுப்பதாகவே அமைத்துள்ளது. ஜனநாயக உரிமைகளை மறுத்துள்ள திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.
இதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு திருநெல்வேலி பத்திரிக்கையாளர் மன்றம் இயல்பாக வழக்கம் போல் செயல்பட உரிய உத்திரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.