
மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் 180 அரிய வகை தாவரங்கள் குறித்த நூல் சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
உலக வன நாளையொட்டி, சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வி.கணேசன் எழுதிய மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை தாவரங்கள்நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத் தலைவர் ரவிகாந்த் உபாத்யாய் வெளியிட முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (உயிரினம்) சஞ்சய்குமார் ஸ்ரீவாஸ்தவா பெற்றுக் கொண்டார். இந்த நூல் குறித்து அதன் ஆசிரியரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான வி.கணேசன் கூறியது:
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாவரங்கள் குறித்து கடந்த 1921-ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரியான பிட்சர் என்பவர் புத்தகம் வெளியிட்டார். அதன்பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கொண்டை பனை, குறிஞ்சி, பால்சம், கொடம்புளி உள்ளிட்ட 180 அரிய வகை தாவரங்களின் குணங்கள், மருத்துவப் பயன்கள் ஆகியவை குறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை தாவரங்கள் என்ற இந்தப் புத்தகத்தில் படத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங் , சுற்றுச்சூழல், வனத் துறை முதன்மைச் செயலர் தீபக் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...