சென்னை: மதுவால் ஏற்படும் சாவுகளுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையில் மதுபோதையில் உண்டான தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்ததாக வீராசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவானது சென்னைஉயர் நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இத்தகைய சாவுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழக அரசுதான் மது விற்பனையில் ஈடுபடுகிறது என்பதால், மதுவால் ஏற்படும் சாவுகளுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக் கூடாது?
தமிழக அரசுக்கு மது விற்பனையின் மூலம் மாதத்திற்கு 21 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று தெரிவிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
தமிழக இளைஞர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் மது போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் ஏப்ரல் 4 - ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தனர்.