
பிரபல இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென புதன்கிழமை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மகேந்திரனின் மகனும், இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது அப்பாவுக்காக பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், இயக்குநர் மகேந்திரனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...