சென்னை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ., வி.டி.கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அ.பிரபு ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டே அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சில புகைப்பட ஆதாரங்களுடன் மூன்று பேர் மீது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீண்டும் சபாநாயகரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்தப் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால் மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி மற்றும் விருத்தாசலம் எம்.எல்.ஏ., வி.டி.கலைச்செல்வன் ஆகியஇருவரும் உச்ச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுத்திருப்பதால், அவர் எந்த விதமான நடவடிககையும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வெள்ளியன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.