
ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வணிகர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற இருப்பதால் ஆவின் பால் விநியோகத்தில் பிரச்னை ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திக்கு விளக்கம் அளித்து ஆவின் நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) ஆவின் பால் விநியோகம் செய்யப்படும். வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை அளித்தாலும், அதனை சரிசெய்யும் வகையில் அந்தந்த பகுதிகளில் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும். பால் எங்கு தேவைப்படுகிறதோ அந்தப் பகுதிகளுக்கு தனி வாகனங்கள் மூலமாக பால் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிக்கக் குழு: பால் விநியோகம் தங்குதடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க ஆவின் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, பால் விநியோகத்தில் ஆவின் பால் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் வழக்கம்போல் ஈடுபட வேண்டும். ஆவின் பூத்கள், பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் போதுமான அளவுக்கு ஆவின் பால் இருப்பு வைக்க வேண்டும்.
பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், குறிப்பிட்ட சில ஆவின் பால் விற்பனை நிலையங்கள் மூலமும் 24 மணி நேரமும் பால் தாராளமாகக் கிடைத்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார்களை 1800 425 3300 என்ற கட்டணமில்லாத தொலைபேசி மூலமாகத் தெரிவிக்கலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.