
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் இருந்து இன்று 1 லட்சத்து 34 ஆயிரத்து 711 மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. ஃபானி புயல் பாதிப்பால் ஒடிஸா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளன.
ஃபானி புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.