
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்ற அரசுதான் மத்தியில் உள்ளது.
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் முற்போக்கு, மதச்சார்பற்ற இயக்கங்கள் அதிகமாக உள்ளன. இங்கும் பெரியாரைக்கூட தவறாகப் பேசும் அவல நிலைதான் உள்ளது. ஒருவர் குடியிருக்கும் பகுதி நீதிமன்ற உத்தரவால் மாற்றப்பட்டால் அதற்குப் பதிலாக மாற்று இடம் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
காமராஜர் காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக் கட்டடத்தில் பலர் குடியிருந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், அந்தக் கட்டடத்தை அகற்றி வேறு கட்டடம் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் மாற்றப்பட்டனர்.
2007 -இல் கருணாநிதி ஆட்சியில் எனக்கு அங்கு இடம் கொடுக்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் வீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஏழைகளுக்கும் மரியாதை இல்லை, தியாகிகளுக்கும் மரியாதை இல்லை.
பாஜகவுக்கு ஆதரவாகத்தான் தமிழகத்தில் ஆட்சி இருக்கிறது. பணப்புழக்கம் இல்லாமல் தேர்தல் நடக்க வேண்டும். தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்து மதத்தைப் பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. மதவெறியைப் பற்றிதான் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலில் தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெறும் என்றார் அவர்.