
சென்னை: மதத்தை நம்பி அரசியல் செய்யக் கூடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணைய விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்துகளைத் தெரிவிக்க முடியாது.
நகைச்சுவையாகக் கூற வேண்டுமெனில் அவர்களுக்குள்ளேயே தேர்தல் வைக்க வேண்டும் போல் இருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தின் உள்ளே நடக்கும் விஷயம். அதில் நாம் தலையிட முடியாது.
கமல் சர்ச்சை பேச்சு: கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஒரு அரசியல்வாதியாக இருப்பவர் மக்களை நம்பி இருக்க வேண்டும். மதத்தை நம்பியிருக்கக் கூடாது. மக்களை நம்பி, அதன் மூலம் மக்களின் தேவை, எதிர்பார்ப்பு, மாநிலம் வளர்ச்சியைப் பெற நமது பங்கு என்ன என்ற அடிப்படையில் சிந்திப்பவரைத்தான் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.