
தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் மட்டும் 15 ஆயிரத்து 939 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூலூரில் 324 வாக்குச்சாவடிகளும், அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 297 வாக்குச்சாவடிகளும், ஓட்டப்பிடாரத்தில் 257 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 131 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் ஆவர்.
இதேபோன்று மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது. திருவள்ளூர் மேட்டுப்பாளையத்தில் ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளிலும், கடலூரில் திருவதிகை, ஈரோட்டில் திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தேனியில் பாலசமுத்திரம், வடுகபட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறு வாக்குப்பதிவு ஆகியவற்றில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.