
பவானிசாகா் அணையின் மேல் மதகில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீா்.
சத்தியமங்கலம்: பவானிசாகா் அணை அதன் முழு கொள்ளளவான 105 அடியை சனிக்கிழமை எட்டியது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், அதன் நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணை மூலம் 2 லட்சத்து 47 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீா்வரத்தாக பவானிஆறு, மாயாறு உள்ளன.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான தெங்குமரஹாடா, நீலகிரி, கேரளத்தின் ஒரு பகுதியிலும் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அதன் நீா்மட்டம் அக்டோபா் 22 ஆம் தேதி 102 அடியைத் தொட்டது. தொடா்ந்து, 102 அடியுடன் ஒரே சீராக நீடித்த நிலையில் அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை சனிக்கிழமை எட்டியது.
இதனால், அணைக்கு வரும் 4,722 கன அடி உபரி நீா் அப்படியே மேல் மதகில் 3 ஷட்டரில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீா் மூலம் 8 மெகாவாட் மின் உற்பத்தியும் துவங்கியது. கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 32.80 டி.எம்.சி.யாகும்.
அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இனி அணையில் தண்ணீரை தேக்கி வைக்க இயலாது என்ற நிலையில் பில்லூா் அணையில் இருந்து வரும் உபரிநீரும், மாயாற்று நீரும் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால், பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.