சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர்கள் கட்சி தொடங்குவது மற்றும் கமல் அரசியலில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக காரசாரமாக பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசுகையில், நடிகர்கள் எல்லாம் வயதாகிவிட்டால் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்படம் மூலம் கிடைக்கும் விளம்பரத்தைக் கொண்டு தலைவனாக நினைக்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் நடிகர்கள், மக்களுக்காக என்ன செய்தார்கள். அவ்வளவு ஏன், தமிழகத்தில் எத்தனை உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன என்பது கூட தெரியாது என்று கூறினார்.
மேலும், அரசியல் பற்றி நடிகர் கமலுக்கு என்ன தெரியும்? சரி, இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்? என்று சரமாரியாகக் கேள்விகளையும் எழுப்பினார் முதல்வர் பழனிசாமி.
தொண்டர்களாவது தனது படத்தைப் பார்க்கட்டுமே என்று இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்றும் மிகப்பெரிய நடிகராக பெயர் எடுத்தவர் சிவாஜி. ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது என்ன நடந்தது? சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கும் வரும் என்றும் பழனிசாமி காரசாரமாக பதில் அளித்தார்.