முதல்வரிடம் ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை நேரில் புகார்

சென்னையில் உள்ள ஐ,ஐடி.யில் தனது மகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக இறந்த மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளக் கோரி மனு அளித்த அவரது தந்தை அப்துல் லத்தீப்.  
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளக் கோரி மனு அளித்த அவரது தந்தை அப்துல் லத்தீப்.  
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள ஐ,ஐடி.யில் தனது மகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக இறந்த மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் கூறினார். 
 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி ஆகியோரை லத்தீப் வெள்ளிக்கிழமைச் சந்தித்துப் பேசினார்.
முதலில் டிஜிபியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய லத்தீப், நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியது:

பள்ளித் தேர்வுகளில் முதல் ரேங்க் பெற்று, சென்னை ஐஐடி.யில் இடம் கிடைத்த நான்கே மாதங்களில் எனது மகள் இறந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் விசாரணை  நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எனக்கு உறுதி அளித்துள்ளார்.
எப்போதும் தினசரி நடைபெறும் நிகழ்வுகளைக்  கடிதமாக எழுதி வைக்கும் வழக்கம் பாத்திமாவுக்கு உள்ளது. இதேபோன்று கடிதம் எழுதி வைத்து மரணித்துள்ளார். பாத்திமா மரணித்த அறையை சீல் வைக்கவில்லை. அங்குள்ள ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும்.  அனைத்திலும் எனது மகள் சிறப்பிடம் பெற்றிருந்தாள். பாத்திமா தொடர்பாக என்னிடம் இருந்த ஆவணங்களை டிஜிபி.யிடம் அளித்துள்ளேன்.
எனது மகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.  ஐஐடி வளாகத்தில் பாத்திமாவின் செயல்பாடுகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கேட்ட போதும் அதனைக் கொடுக்கவில்லை.  இதுவரை ஐஐடி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தனிப்பட்ட முறையில் பதில் தரவில்லை. ஒரு விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்றார்.
முதல்வருடன் சந்திப்பு: டிஜிபியைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை அவரது இல்லத்தில் லத்தீப் சந்தித்து முறையிட்டார். அதன்பின், நிருபர்களிடம் பேசிய அவர், மரணத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். அடுத்த சில நாள்களில் தேவை ஏற்பட்டால் முதல்வரை மீண்டும் சந்திப்பேன் என்றார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: அதைத் தொடர்ந்து லத்தீப், எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் 
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com