வரி ஏய்ப்பு புகார்: கரூர் ஏற்றுமதி நிறுவனத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் சோதனை

வரி ஏய்ப்பு புகார் காரணமாக கரூரில் பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் சோதனையானது மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

கரூா்: வரி ஏய்ப்பு புகார் காரணமாக கரூரில் பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் சோதனையானது மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

கரூா் வெண்ணைமலையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு தனியாா் கொசுவலை ஏற்றுமதி  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா்.

வருமான வரித் துறையினா் 5 குழுக்களாகப் பிரிந்து விடிய, விடிய நடைபெற்ற இந்தச் சோதனை சனிக்கிழமையும் நீடித்தது. சேலம் புறவழிச்சாலையில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, கோவைச்சாலையில் உள்ள தொழிற்சாலை மற்றும் ராம்நகரில் உள்ள நிறுவன உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி அங்கு கைப்பற்ற ஆவணங்களை வெண்ணைமலையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா்.

பின்னா் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் சோதனையில் அந்த நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. விசாரணையில் அவையெல்லாம் கணக்கில் வராத பணம் என்று தெரிய வந்தது.

இந்த சோதனையில் ரூ.23 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நடந்த சோதனையில் சில இடங்களில் மேலும் ரொக்கப்பணம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் சோதனையானது மூன்றாவது நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com