சென்னை: திருச்சி ரயில் நிலையத்தில் மலையாளத்தில் முன்பதிவு படிவம் வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு ரயில்வேயின் பயணச்சீட்டு மற்றும் அதன் முன்பதிவு படிவத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளோடு அந்தந்த மாநில மொழியும் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு மையத்தில் விநியோகிக்கப்படும் படிவத்தில் தமிழ் மொழி இல்லை. தமிழுக்குப் பதிலாக மலையாளம் இடம்பெற்றுள்ளது. படிவத்தின் பின்பகுதியில் வழக்கம்போல் ஆங்கிலமும், இந்தியும் உள்ளன. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழியை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.