
சூலூர்: கோவையில் அதிமுக கொடிக்கம்பு சாலையில் சாய்ந்து நிகழ்ந்த விபத்தில் சிக்கி காயமடைந்து காலை இழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
கோவை, சிங்காநல்லூர் அக்ரஹாரம் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த நாகநாதனின் மகள் ராஜேஸ்வரி. இவர் இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் கடந்த 12}ஆம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, கொடிக்கம்பு சாலையில் சாய்ந்து விழுந்தில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து இடதுகாலை அகற்றினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது பெற்றோரிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விபத்து சம்பந்தமாக லாரி ஓட்டுநரை மட்டும் கைது செய்துள்ளனர். ஆனால் கொடிக் கம்பை சாலை நடுவே நட்ட அதிமுகவினரைக் கைது செய்யவில்லை. அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றார்.