2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக, ரஜினி கூறிய அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், 'தமிழகத்தில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி கூறுகிறார். அது உண்மை தான். அதிசயம் கண்டிப்பாக நடக்கும். தமிழகத்தில் 234 தொகுதியிலும் அதிமுக கொடி பறக்கும். 2021 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக அந்த அதியசத்தை நிகழ்த்தும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஜெயித்து எடப்பாடி பழனிசாமியிடம் கொடுப்போம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதும் அதிசயம் என்று கூறுகிறார்கள். ஆனால், ஒருபுறம் எதிரி, ஒருபுறம் துரோகி என்று செய்த கூட்டுச் சதியை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அவரது ஆளுமையே காரணம்.
பாஜகவிற்கு அதிமுக அடிமை என்கிறார்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய பாஜக அரசிடம் போராடி பல உரிமைகளை பெற்று தந்து உள்ளார்' என்று பேசினார்.