சென்னை: வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மூலம் நீட் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் கமல் தான் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவர் நடிகர் கமல் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களுக்காக கமல் கட்சியைத் தொடங்கவில்லை. இதுவரை மக்கள் பிரச்னைக்காக போராட்டங்களைத் தொடங்கியுள்ளாரா? தேர்தல் நேரத்தில் வருவார், பிறகு பிக்பாஸ் பக்கம் போய்விடுவார்.
பிக்பாஸ் வீட்டிக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அது அலிபாபா குகை போல உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும் கூறினார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்கும் புகார், கமல் படம் விஸ்வரூபம் போல விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீரானது குறித்து 'தெனாலி' போல ஜெயக்குமார் பதிலளித்திருப்பது, மக்களை வாழ்வே மாயம் என்று புலம்ப வைத்திருக்கிறது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக கமலுக்கு பதில் மருத்துவராக இருக்கும் கிரேஸி மோகன் தேர்வு எழுதுவார். இதற்காக கிரேஸி மோகனின் தந்தையை கமலின் நண்பர்கள் குழு கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள்.
இப்போது நீட் தேர்வில் ஒரு மாணவருக்கு பதிலாக வேறு ஒரு மாணவரின் புகைப்படத்தையே ஹால் டிக்கெட்டில் ஒட்டி அவரே தேர்வெழுதி, வேறு ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.