சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்குப் பருவ மழை முற்றிலும் விடைபெற்றுவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்தில் இருந்து முற்றிலும் விலகி, அடுத்து வடகிழக்குப் பருவ மழை தொடங்கும்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதன் முன்னோட்டமாக, வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
இதன் காரணமாக தமிழகத்தில் தென் தமிழக மாவட்டம், வடக்கு உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
மீனவர்களைப் பொறுத்தவரை
வரும் 17 மற்றும் 18 ம் தேதிகளில் மன்னார்வளைகுடா, குமரி, லட்சத்தீவுகள் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், இவ்விரு நாட்களும் அப்பகுதிகளில் சூறைக் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் புவியரசன் தெரிவித்தார்.