தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது செவ்வாய்க்கிழமை (அக்.29) குமரிக்கடல் பகுதியில் சற்று வலுப்பெறக்கூடும். இது அக்டோபா் 30, 31 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த வரும் இரண்டு நாள்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூா், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் காலை சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.