
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவாய் மீன்கள் வரத்து குறைந்ததால் தினமும் ரூ. 6 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கொண்டு வரும் 2-ஆம் தர மீன்களும் விற்பனை ஆகாமல் தேங்கி வீணாகி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
குளச்சலைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் 7 முதல் 10 நாள்கள் வரை நடுக்கடலில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
மீனவர்கள் அதிகளவில் ஏற்றுமதி ரகமான முதல் தர கணவாய் மீன்கள், அரவை ஆலைகளுக்கு தேவையான 2-ஆம் தர மீன்களையும் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கணவாய் மீன்கள் வரத்து குறைந்து காணப்படுவதால், விசைப் படகு மீனவர்கள் தங்களது படகு செலவினங்களை ஈடு கட்டும் வகையில் 2-ஆம் தர மீன்களை அதிகளவில் பிடித்து வந்தனராம்.
2-ஆம் தர மீன்களை கொண்டு மீன் எண்ணெய் மற்றும் கோழித் தீவனங்கள் உற்பத்தி செய்து வரும் அரவை ஆலைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததால் இந்த ஆலைகள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீனவர்கள் பிடித்து வந்த 2-ஆம் தர மீன்களை அரவை ஆலைகள் கொள்முதல் செய்யாததால் அவை தேங்கியுள்ளன.
மீன்பிடித் தொழிலுக்கு சென்று கரை திரும்பும் விசைப் படகுகளில் கொண்டு வரப்படும் இந்த மீன்கள் டன் கணக்கில் மீன்பிடி துறைமுக வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த மீன்கள் விற்பனை ஆகாததால் துறைமுகப்பகுதியில் அழுகி வீணாகி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து குளச்சல் மீனவர் பெர்லின் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலுக்கு பின்னர் கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடல் பகுதியில் முன்பு போல முதல் தர மீன்கள் கிடைப்பதில்லை. சில நேரங்களில் தங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகளுக்கான டீஸல் உள்ளிட்ட செலவினை ஈடுகட்டுவதற்கு கூட மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் விசைப் படகு மீனவர்களுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நாள்தோறும் ரூ. 6 கோடி வரையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களுக்கு பேரிழப்பாகும் என்றார் அவர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G