கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.
கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்தது, மாலையில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கடந்த மாதம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 3 லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டபோது, ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பிரதான அருவி, நடைபாதை பகுதிகள் சேதமடைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி திங்கள்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை
குறைந்து காணப்பட்டது. சுற்றுலா வந்தவர்கள் காவிரி கரையோரப் பகுதிகளான முதலைப் பண்ணை, மாமரத்துக்கடவு பரிசல்துறை, ஊட்டமலை மற்றும் ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆபத்தான இடங்களில் குளிக்கும் நிலை ஏற்பட்டது.
அதனால் ஒகேனக்கல் பிரதான அருவியை சீரமைத்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.