வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதோடு, வீட்டினுள் சமைத்து சாப்பிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடித் தெருவில் வசித்து வருபவர் பாரூக்அகமத். இவர் ஞாயிற்றுக்கிழமை உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டார். செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், வாணியம்பாடி நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், காவல்ஆய்வாளர் சந்திரசேகர் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டினுள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டினுள் சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே கொள்ளை போன பொருள்களின் முழுவிவரம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.