கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நாங்குநேரியில் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி, குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா என ஆராய வேண்டும். வாக்குச்சாவடியை கைப்பற்ற முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா?. மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது.
காங்கிரஸின் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது. கூட்டணி இன்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாதா? 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? கூட்டணி இன்றி வெற்றிபெற முடியாதா என்பதற்காகத்தான் இந்த கூட்டமே. தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர்நாடி என்றார்.