மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போட்ட பிறகு ஊசியின் பாதிமுனை உடைந்து காலுக்குள் இருந்ததைப் பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கவனக்குறைவாக செயல்பட்டதைக் கண்டித்து மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள எம்.எஸ்.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மலர்விழிக்கு கடந்த 22ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
மலர்விழியையும், குழந்தையையும் மருத்துவமனை நிர்வாகம் கடந்த 30 ஆம் தேதி சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அனுப்பும் முன்னர் குழந்தைக்கு இடது கால், கையில் தடுப்பூசி போட்டனர். வீட்டுக்குச் சென்ற பிறகும் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில், மலர்விழியின் தாயார் தேன்மொழி குழந்தையை திங்கள்கிழமை குளிக்க வைத்தார். அப்போது, குழந்தையின் காலில் வீக்கம் இருந்ததைப் பார்க்காமல் தேய்த்துள்ளார். இதில் குழந்தையின் காலில் இருந்த உடைந்த ஊசியின் பாதி முனை தேன்மொழியின் கையில் குத்தி ரத்தம் வந்துள்ளது.
இதைப் பார்த்த தேன்மொழி குழந்தையின் காலில் இருந்த ஊசியை எடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவரையும், செவிலியரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் (பொறுப்பு) இளஞ்செழியன், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு பெற்றோரும், உறவினர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.