
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்கியதாக செவ்வாய்க்கிழமை கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பலத்த சூறை காற்று வீசியதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை சகஜநிலை திரும்பியதையடுத்து, ராமேசுவரத்தில் இருந்து 650க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கரை திரும்பிய மீனவர்கள், கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 6 ரோந்து கப்பல்களில் வந்து தங்கள் மீது பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்கியதாகவும், 20க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி கடலில் வீசியதாகவும் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், தாக்குதல் காரணமாக மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க இலங்கை அரசுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.